வனத்தில் வறட்சி எதிரொலி ஃ அமராவதி அணை நோக்கி யானைகள் ‘விசிட்’
Udumalai: வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், உடுமலை அமராவதி அணையை நோக்கி வன விலங்குகள் படையெடுக்கத்துவங்கியுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில், சிறுத்தை, புலி, ஆயிரக்கணக்கான பல்வேறு வகை மான்கள், நூற்றுக்கணக்கான யானைகள், காட்டெருமை, பல ஆயிரம் பறவைகள் என வனவிலங்குகள் வசித்து வருகிறது.
இந்தாண்டு, தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பாதியாக குறைந்த நிலையில், குளிர் கால மற்றும் கோடை மழையும் ஏமாற்றி வருகிறது.இதனால், வனப்பகுதியிலுள்ள காட்டாறுகள், ஓடைகள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இலையுதிர் காலமாக உள்ளதால், வனத்திலுள்ள மரங்களிலும் இலைகள் உதிர்ந்து வருகிறது.மலைகள் நிறைந்துள்ள பகுதியில், வன விலங்குள் வசிப்பதற்கு அமராவதி வனச்சரக பகுதியில் சமதள பரப்பு மற்றும் நீர் நிலைகள் , தடுப்பணைகள், செயற்கை நீர் தேங்கும் குளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகளுக்கு ஏற்ற நீர் இருப்பு திருப்தியாக உள்ளதால், வன விலங்குகள் எண்ணிக்கை அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில், வனத்தில் வறட்சியும் ஏற்பட்டுள்ளதால், வன விலங்குகள் அமராவதி அணையை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது. வன விலங்குகளுக்கு ஏற்ற உணவுக்கான மரங்கள், மாமிச உண்ணிகளுக்கு ஏற்ற வன விலங்குகள், தண்ணீர் ஆகியவை இருப்பதால் தற்போது அதிகளவு வன விலங்குகள் அமராவதி அணை பகுதியில் முகாமிட்டுள்ளது. நூற்றுக்கணக்கான யானைகள், குட்டிகளுடன் அணை பகுதியில் உலா வருகிறது.
ஆயிரக்கணக்கான மான்களும், காட்டு பன்றிகளும், காட்டெருமைகளும் அமராவதி அணை நீர் தேங்கும் பரப்பிலுள்ள பசு மை புல் வெளியில் மேய்ந்து வருகிறது.மான்கள் அதிகளவு உள்ளதால், சிறுத்தைகள் நடமாட்டமும் இப்பகுதியில் உள்ளது. உடுமலை – மூணாறு ரோட் டிலும் வன விலங்குகள் நிற்கின்றன. இந்த வழியே செல்லும் மக்கள் வன விலங்குகளை பார்த்து ரசித்து வருகின்றனர்.











