நூல் மில்லில் தீ : மூன்று பேர் காயம்
palladam : தனியார் நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர்.பல்லடம் அருகே குன்னாங்கால்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி(50). இவர், காமநாயக்கன்பாளையத்தில் நூல் மில் நடத்தி வருகிறார். மில்லில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 10.00 மணிக்கு, மில்லில் ஒரு பகுதி தீப்பிடித்து எரியத் துவங்கியது. தகவல் கிடைத்து பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சியில் இருந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
20 தீயணைப்பு வீரர்கள் ஆறு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நவீன இயந்திரங்கள், பஞ்சு பேல்கள், நூல் பேல்கள் உட்பட பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை கோவை கோட்ட தீயணைப்பு மீட்பு அலுவலர் லூர்துநாதன், உதவி கோட்ட அலுவலர் மதியழகன் உட்பட பலர் பார்வையிட்டனர். இந்த விபத்தில் மூன்று தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.










