‘அன் ரிசர்வேஷன்’ ரயில் டிக்கெட் விற்பனைக்கு அலுவலகம் திறப்பு
Tirupur : “அன் ரிசர்வேஷன்’ ரயில் டிக்கெட் விற்பனைக்காக, திருப்பூரில் இரண்டு தனியார் ஏஜன்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். “அன் ரிசர்வேஷன்’ டிக்கெட் விற்பனையை, சேலம் கோட்ட வணிக மேலாளர் லட்சுமணன் நேற்று துவக்கி வைத்தார்.
ரயிலில் பயணிக்க “அன் ரிசர்வேஷன்’ டிக்கெட் வாங்க, கவுன்டர் முன் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை பயணிகளுக்கு உள்ளது. அதனால், பயணிகளுக்கு காலதாமதம் ஏற்படுவதோடு, சலிப்பும் ஏற்படுகிறது. “அன் ரிசர்வேஷன்’ மூலம் பயணம் செய்வோருக்காக, “ஜன் சதாரன் டிக்கெட் புக்கிங் சேவக்ஸ்’ திட்டத்தில், டிக்கெட் விற்பனை செய்ய முக்கிய ஊர்களில் ஏஜன்டுகளை ரயில்வே நிர்வாகம் நியமித்து வருகிறது.அத்திட்டத்தில், திருப்பூரில் “அன் ரிசர்வேஷன்’ டிக்கெட் விற்க இரண்டு ஏஜன்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே ஸ்டேஷன் அருகே ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி ரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில், அதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. “அன் ரிசர்வேஷன்’ டிக்கெட் விற்பனையை, சேலம் கோட்ட வணிக மேலாளர் லட்சுமணன் துவக்கி வைத்தார். முதன்மை வணிக ஆய்வாளர் உதயக்குமார், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் நிலைய மேலாளர் பெரியசாமி, ஏஜன்டு அழகிரி, ரயில்வே பணியாளர்கள் பங்கேற்றனர்.











