இன்று துவங்குகிறது ‘நம்ம திருப்பூர் – கூடல் 2010′
திருப்பூர் : தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, கலை, புராதனங்களை வெளிப்படுத்தும் “நம்ம திருப்பூர்-கூடல் 2010′ கலை பண்பாட்டு திருவிழா, திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் இன்று துவங்குகிறது.தமிழ் மையம் சார்பில், சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் விரிவாக, “நம்ம திருப்பூர்-கூடல் 2010′ கலை-பண்பாட்டு திருவிழா நடத்தப்படுகிறது; வரும் 7ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. கொங்கு மண்டலத்தின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரங்கள், முக்கியத்துவங்களை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
இன்று மாலை 5.00 மணிக்கு, சிக்கண்ணா கல்லூரி வளா கத்தில், எம்.பி., கனிமொழி தலைமை வகித்து, “நம்ம திருப்பூர்’ கலையரங்கத்தை திறந்து வைக்கிறார்.அதன்பின், “நம்ம திருப்பூர்’ கலைத்திருவிழா துவங்குகிறது. “வசந்த வீதி’ என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக்கலைஞர்கள் பங்கேற்கும் இசை நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. பழனி இசை கல்லூரி மாணவர்களின் இசை மகோற்சவம் நடக்கிறது.கொங்கு மண்டலத்தின் கம்பீரமான அடையாள மாக விளங்கும் காங்கயம் காளைகளில், சிறந்த காளைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவற்றுக்கு பரிசளிப்பு விழா, காங்கயம் அரசு பள்ளியில், நாளை காலை 10.00 மணிக்கு நடக்கிறது; அமைச்சர் பழனிசாமி தலைமை வகிக்கிறார். கனிமொழி எம்.பி., அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

tirupur current news, tirupur festival
அன்று மாலை, திருப்பூரில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு மத்திய அமைச்சர் ராசா தலைமை வகிக்கிறார். “சங்கமம்’ நடன நிகழ்ச்சி, சென்னை அவிக்னா நடனக்குழுவினர் மற்றும் திருப்பூர் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, கொங்கு நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்வு உள்ளிட்டவை நடக்கின்றன. “நல்லோர் போற்று தும்’ என்ற தலைப்பில், பல்வேறு துறைகளை சார்ந்த திருப்பூர் மாவட்டத்துக்கு சிறப்பு சேர்ப்பவர்களுக்கு வாழ்த்தும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுதினம், “சங்கே முழங்கு’ என்ற தலைப்பில், “டிரம்ஸ்’ சிவமணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி நடக்கும் மூன்று நாட்களும், கொங்கு நாட்டு பண்பாடுகளை வெளிப்படுத்தும் விதத்தில், பாரம் பரிய கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் ஒரு பகுதியாக உணவு திருவிழாவும் நடக்கிறது










